Friday, September 4, 2009

பள்ளிக்கூட வாத்தியார்கள்...


நான் பெரிதும் மதிக்கும் ஆசிரியர்களை சிலரை
இன்நன்னாளில் நினைத்துப்பார்க்கிறேன்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை திருத்துறைப்பூண்டி
புனித தெரசாள் தொடக்கப்பள்ளியில் படித்தபோது
எனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஒருசிலரே இன்று
என் நினைவில் இருக்கின்றனர்.
கணக்கு பாடம் எடுத்த பத்மாவதி (மிஸ்) டீச்சர்,
அறிவியல் சொல்லிக்கொடுத்த சுகந்தி டீச்சர்,
பனிமலர் டீச்சர், செல்வி டீச்சர், ஹிந்தி மிஸ் அருள்....
தலைமையாசிரியை சிஸ்டர் மேரி..

பள்ளிக்கு அழைத்துசெல்லும் வேன் எங்கள் வீட்டு
தெருமுனையில் வந்து திரும்பும் சத்தம் கேட்டாலே
எனக்கு அலர்ஜி..
இன்றைக்காவது வேன் வரக்கூடாது என்ற என் வேண்டுதல்
தினமும் பொய்யாகி போகும்.

பிறகு ஆறு முதல் பணிரெண்டாம் வகுப்பு வரை
மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளியில்....
இங்கு நான் கற்றுக்கொண்டது ஏராளம்...
பின்லே என்ற ஆங்கிலேயர் தன்னுடைய
கப்பலை விற்று கட்டிய பள்ளி
என்பது வரலாறு..

திரு.ரெல்டன் M ஜேம்ஸ்:
நான் இன்றளவும் ஆச்சர்யமாய் பார்க்கும் ஒரு மாமனிதர்.
150 வருடம் பழமையான அதே பள்ளியில் மாணவனாய்,
ஆசிரியராய், பின்பு தலைமையாசிரியராக உயர்ந்தவர்.
அவரது தந்தையும் அதே பள்ளியின் பழைய மாணவர்.
அவர் நடையில், உடையில், பார்வையில், பேச்சில் என
எல்லாவற்றிலும் ஒரு கம்பீரம், மிடுக்கு...
பள்ளி விழாக்களில் அவர் மைக்கை பிடித்து பேசினார்
என்றால் கூட்டமே மெய்மறந்து கிடக்கும்.
வசிகரமான பேச்சாளர். கண்டிப்புக்கு பெயர் போனவர்..
பாராட்டவும் அவருக்கு நிகர் அவர்தான்...
அவர் கையால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்
கணிதத்தில் பள்ளியின் முதல் மாணவன் என்ற
பரிசு பெற்றது என்னுடைய பெரும்பேறு..
அவர் தூரத்தில் மாடிப்படிகளில் ஏறும்போதே
வகுப்பில் இருக்கும் எங்களுக்கு தெரிந்துவிடும்
அவர்தான் வருகிறார் என்று அத்தகைய நடை...
தற்போது அவரது மகனும் அப்பள்ளியின் மாணவர்.

திரு.ராம் ஸ்டாலின்:
என் பள்ளி வாழ்க்கையை செம்மைபடுத்தியதில்
இவருடைய பங்கு மிக அதிகம்.
என்னை கவர்ந்த, நான் பெரிதும் மதிக்கும் ஆசிரியர்களில்
முதலிடம் இவருக்குதான்.
ஒருவிதமான பயம் கலந்த மரியாதை அவர்மீது எனக்குண்டு.
நான் சோர்ந்தபோதெல்லாம் என்னை ஊக்கப்படுத்தியவர்,
நான் பெற்ற வெற்றிகளுக்கு பெரிதும் உவகையுற்றவர்.
வாழ்வில் மிக உயர்ந்த இடத்தை அடைந்த பிறகே
அவரை திரும்பவும் சந்திக்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.
கூடிய விரைவில் அந்த நாள் வரும்.
TO OBEY IS BETTER THAN SACRIFICE.

திரு.ஜான் சாம்:
எனக்கு பத்தாம் வகுப்பில் ஆங்கில பாடம் எடுத்த ஆசான்
மனதில் பட்டதை வெள்ளந்தியாய் பேசும் நாகர்கோயில்காரர்.
ஒருவரை கூட ஒருபோதும் அடித்ததில்லை.. அதட்டி பேசியதில்லை.
ஆனாலும் அவர் வகுப்பு மிக அமைதியாக இருக்கும்.
சிரிக்க சிரிக்க பாடம் நடத்தும் பாசக்காரர்.
அவர் பாடம் நடத்தியதை விட கதை சொல்லிய நாட்களே அதிகம்.



திரு.அன்பழகன்:
கல்லூரியின் முதல் நாள், முதல் வகுப்பு, எல்லோரும் புதிய முகங்கள்.
அவர் வருகிறார். கூட்டமே எழுந்து நின்று வணக்கம் சொல்கிறது.
அவர் சாக்பீசை எடுத்துக்கொண்டு மேடையேறுகிறார்.
"CAYLEY HAMILTON LAW" என்று ஆரம்பித்தவர்
அந்த ஒரு மணிநேரமும் புயல்வேகத்தில் பாடம்.
வேகம், வேகம் அத்தனை வேகம்.
மணி ஒலித்த பிறகுதான் நிறுத்தினார்.
அன்று மட்டுமல்ல அவரது கடைசி வகுப்பு வரை அப்படிதான்.
எங்களுக்கு கணக்கு பாடம் எடுத்த கணித மேதை திரு.அன்பழகன்
அவர்களை நன்றியோடு நினைத்து பார்க்கிறேன்.

திரு. P.K.செந்தில்குமார்:
CONTROL SYSTEM-ம், PROCESS CONTROL-ம் சொல்லிக்கொடுத்தவர்.
DEADBEAT & DHALINS ALGORITHM-ம் எங்கள் மக்குமண்டையில்
ஏறியதும் இவர் புண்ணியத்தில் தான்..
என்னதான் வாய் வலிக்க திட்டினாலும் INTERNAL MARKS
குறைக்காமல் போடும் குணக்குன்று.
நீங்கெல்லாம் எங்க உருப்படபோறீங்க? என்று எப்பொழுதும்
ஒரு ஏளனப்பார்வை எங்கள் மீது..
சார் நாங்கெல்லாம் இப்போ உருப்பட்டுட்டோம் சார்..

தீபா மேடம்:
எலெக்ட்ரானிக்ஸ் என்றாலே டீ.வியும், D.V.D-யும் தான் என்று
நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் ZENER DIODE-டையும்,
MOS-FET-டையும் அறிமுகப்படுத்தியவர்.
யாராவது ஒருவர் புரியவில்லை என்று சொன்னாலும் சிறிதும்
தளராமல் திரும்பவும் சொல்லித்தரும் விதம் எங்கள் நினைவை
விட்டு இன்றும் அகலவில்லை.

ஸ்ரீவித்யா மேடம்:
CIRCUIT ANALYSIS சொல்லித்தந்த ஸ்ரீவித்யா மேடம்.
நாங்களும் காலேஜ்-ல படிக்கிறோம்-ல என்ற திமிரில் நாங்கள்
அற்பமாய் செய்த பல தவறுகளை சுட்டிக்காட்டி எங்களைத் திருத்தி
அவற்றை H.O.D-க்கு கூட தெரியாமல் மறைத்த புண்ணியவதி.

மகேஸ்வரி மேடம்:
எங்கள் வகுப்புக்கு நாலாறு மாதம் நெறியாளராய் இருந்து
வழிநடத்தியவர்.
DIGITAL ELECTRONICS,
MICROPROCESSOR
போன்ற சிலிக்கான் சிக்கல்களை எங்களின் சிறுமூளையில்
பதியவைத்த பெருமை இவரையே சாரும்.
அடிக்கடி கோபப்பட்டாலும் எதற்காகவும் எங்களை யாரிடமும்
விட்டுக்கொடுக்காதவர். இன்று எங்களில் சிலர் பட்டம் பெற்று
ஒரு பொறியாளராய் வெளிவந்திருப்பது இவரது உதவியால் தான்
என்பது ஒருசிலர் மட்டுமே அறிந்த இரகசியம்.


எத்தனையே ஆசிரியர்கள் எனக்கு பயிற்றுவித்திருந்தாலும்
மிகச்சிலரே என் நெஞ்சில் நிறைந்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் மிகவும் கசப்பாக தெரிந்தவர்கள்
இன்று இனிக்கிறார்கள்.


.

செய்தியோடை...