Wednesday, March 11, 2009

சேவாக் அடிச்ச செஞ்சுரி


உலக கிரிக்கெட் வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு வீரர் தனிச்சிறப்பான ஆட்டத் திறனுடன் தோன்றுவர்.

கிரிக்கெட்டின் எந்த ஒரு விதிகளுக்கும் அடங்காமல் படுபயங்கரமாக எதிரணியினரை கதிகலங்க அடித்து வரும் ஒருவர் சேவாக். இன்று நியுசிலாந்துக்கு எதிராக விரேந்திர சேவாக் ஆடிய ஆட்டம் கிரிக்கெட்டின் மரபான உத்திகள் அனைத்தையும் உடைத்தெறிவதாய் அமைந்து இருக்கிறது.
60 பந்தில் சதமடித்து அசத்தியிருக்கிறார்.
கேப்டன் வெட்டோரி பந்தில் இமாலய சிக்சர் அடித்து தனது 11 வது சதம் கடந்தார்.

முதன் முதலில் அவர் ஆடிய ஆட்டம் பெங்களூரில் ஆஸ்த்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டியில். அந்த ஆட்டத்தில் சச்சின் ஏற்கனவே துவக்கத்தில் களமிறங்கி சதம் எடுத்துவிட்டுச் சென்றார்.

ஆனால் பின்னால் களமிறங்கிய சேவாக்கை அப்போது யாருக்கும் அதிகம் தெரியாது. வர்ணனையாளராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து மட்டும் சேவாக்கை "இன்னொரு டைனமைட் வெடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது" என்று வர்ணித்தார்.

சேவாக்கும் அதனை நிரூபிக்கும் விதமாக அன்று 35 பந்துகளில் அரை சதம் எடுத்தார்! அன்று ஆஸ்திரேலிய அணியில் கிளென் மெக்ரா, கில்லஸ்பி போன்ற தலை சிறந்த பந்து வீச்சாளர்கள் கண்களில் பயம் தெரிந்தது.


அப்போது அவர் தன்னை சச்சின் டெண்டுல்கரின் விசிறி என்று கூறியதோடு, ஆட்டத்திலும் அவரது அதிரடி முறையையே பின்பற்றுகிறேன் என்றார்.

இன்று துவக்கத்திலேயே எதிரணியினரின் பந்துகளை துவம்சம் செய்யும் சிம்ம சொப்பனமாக சேவாக் தொடர்ந்து நீடிக்கிறார். இனிமேலும் அப்படித்தான் ஆடப் போகிறார்.

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் நியூஸீலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நிலை ஏற்பட்ட போது 250 ரன்களுக்கும் அதிகமான இலக்கை குறைந்த ஓவர்களில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில், சேவாக் முதன் முதலாக ஒரு நாள் போட்டிகளில் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். அன்று அவர் 69 பந்துகளில் 100 ரன்களை விளாசி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். அன்றுதான் இந்தியாவின் புதிய அதிரடி மன்னன் பிறந்ததாக அனைவரும் சேவாக்கை கொண்டாடத் துவங்கினர்.


ஒருமுறை சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவ்ர்ட் மெகில்லிடம் போட்டி முடிந்து நிருபர்கள் கேட்டபோது, "நான் தவறாக வீசினேன், சரியாக வீசினேன் என்பதெல்லாம் அல்ல, சேவாக் என்னை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதுதான் வேடிக்கை" என்றார்.
அன்று அவரை மட்டுமல்ல மற்ற எந்த வீச்சாளர்களையுமே அவர் ஒரு பொருட்டாக மதிக்காமல் மைதானம் முழுக்க சிதற அடித்தார்.


இயன் சாப்பல் ஒரு முறை, "இன்னமும் சிறிது காலத்திற்கு சேவாக்கும், கம்பீரும் இது போன்ற அதிரடி முறையைக் கையாண்டு உலகப் பந்து வீச்சாளர்கள் அனைவரையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப் போகிறார்கள், இது இந்திய அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தரும்" என்றார்.

இது போன்று பந்து வீச்சாளரின் பெயர்?
அவரது சாதனை?,
அவர் எவ்வளவு வேகம் வீசுகிறார்?
சுழற்பந்து வீச்சாளாயிருந்தால் அவர் எவ்வளவு தூரம் பந்துகளை திருப்புவார்? என்று கிரிக்கெட்டின் அடிப்படைகளை உடைத்தெறிந்து
“பந்து விழும் இடம் அடி” என்று உள் மனது கூறினால் அடிப்பது இதுவே சேவாக்கின் எளிமையான ஆனால் பயங்கரமான உத்தி.



சேவக் குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வெட்டோரி,

"சேவக் ஆட்டத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவரிடம் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம். அவரை கட்டுப்படுத்த எங்களுக்கு வழி தெரியவில்லை”.

No comments:

செய்தியோடை...